பாதாள உலக குழுவினரால் அச்சுறுத்தல் - பொலிஸாருக்கு பாதுகாப்பு

போதைப் பொருள் சுற்றிவளைப்பு மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்ற பொலிஸார் பலருக்கு பாதாள உலக குழுவினர் ஊடாக உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தொடர்ச்சியாக போதைப் பொருள் வழக்குகளின் சாட்சியாளர்கள் பலரும், போதைப் பொருள் வலையமைப்பின் உறுப்பினர்களும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டு வரும் பின்னணியில் உளவுத் துறையினர் இது குறித்த தகவல்களை பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அறிய முடுகிறது.
அதன்படி தற்போது பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இரு பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட பல பொலிஸாருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இவ்வாறு பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளவர்களில் மேல் மாகாணத்தில் வலயம் ஒன்றுக்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
அத்துடன் இவ்வாறு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொலிஸாருக்கு அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவும் பொலிஸ் மா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.



