ஜனாதிபதி ரணில் வழக்கிலிருந்து விடுதலை - மஹிந்த மற்றும் பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு!

Nila
2 years ago
ஜனாதிபதி ரணில் வழக்கிலிருந்து விடுதலை - மஹிந்த மற்றும் பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு!

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, அதிலிருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மனுதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்காததால் அவரை விடுதலை செய்யுமாறு மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட தரப்பினர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், மற்றைய பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும்  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி வரையில் நீடிக்க நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்தது.