இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை! ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

#SriLanka
Kobi
2 years ago
இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை! ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறப்பின் போது, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது.

குறித்த இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் தகவல்கள் பரிமாற்றம் இடம்பெறும்.

புதிய பிறப்புச் சான்றிதழை பெறும் குழந்தை, தனக்கு 15 வயது பூர்த்தியானதன் பின்னர் தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்கையில், பிறப்பு சான்றிதழில் உள்ள அடையாள இலக்கத்திலேயே தனக்கான தேசிய அடையாள அட்டையை பெற முடியும்.

இந்த முறைமையின் ஊடாக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்போது, பிறப்பு முதல் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும், ஒரே அடையாள இலக்கத்தை பயன்படுத்துவதால், தனிநபர் கல்வி, சுகாதாரம், நிதி மற்றும் சமூக தரவுகளை சேமிக்க அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இலகுவானதாக அமையும்.

மேலும், ஒரே இலக்கத்தின் கீழ் அனைத்து தரவுகளும் காணப்படுவதால், குறித்த நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு இலகுவாக சேவை பெற்றுக்கொள்ளவும் முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பரீட்சார்த்த திட்டம் கம்பஹா, தெஹிவளை, ஹங்குராங்கெத்த, குருணாகல், இரத்தினபுரி மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.