வடக்கில் பிரதேச செயலகங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

Kanimoli
2 years ago
வடக்கில் பிரதேச செயலகங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அலுவலக தேவைக்கு வைக்கப்பட்டிருந்த எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் எடுத்துச் சென்று பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

வடக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ வதிவிடம் ஆகியவற்றில் கடந்த 30ஆம் திகதி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது 65 லீட்டர் எரிபொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அலுவலக மின் பிறப்பாக்கியின் தேவைக்கான 50 லீட்டர் டீசல், பிரதேச செயலாளரின் சொந்த பாவனைக்காக சேமித்து வைத்திருந்த 10 லீட்டர் பெட்ரோல் மற்றும் 5 லீட்டர் மண்ணெண்ணெய் என்வற்றையே பொலிஸார் மீட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதேச செயலாளரை பழிவாங்கும் நோக்குடன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் நடந்து கொண்டதாகவும், திட்டமிட்டு பிரதேச செயலாளரை அசௌகரியத்திற்கு உட்படுத்தி அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அதனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரி பிரதேச செயலக ஊழியர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே வவுனியா பிரதேச செயலக ஊழியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.