டொலர்களை சம்பாதிக்க அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ள வைத்திய நிபுணர்

Prathees
2 years ago
டொலர்களை சம்பாதிக்க  அரசாங்கத்திடம் யோசனை  முன்வைத்துள்ள வைத்திய நிபுணர்

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க உதவும் வகையில் டொலர்களை கண்டுபிடிக்கும் யோசனையொன்றை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா அரசாங்கத்திடம் முன்வைக்கிறார்.

வெளிநாட்டில் உள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தனியான வார்டு ஒன்றை உருவாக்குவதே டொலர்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழியாகும் என நிபுணர் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்து வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியான வைத்தியசாலையை நிறுவுவதோ அல்லது தீவில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் தனியான வார்டுகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதோ டொலர்களை கண்டுபிடிக்க வழி வகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மாணவர்கள் மருத்துவ மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் டொலர்களை மிச்சப்படுத்த முடியும் என தெரிவித்த திரு.தீபால் பெரேரா, இலங்கையில் உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான வசதிகளை அதிகரிப்பது மற்றுமொரு தீர்வு எனவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு மாணவர்களுக்காக இலங்கையில் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதன் மூலமோ அல்லது உள்ளூர் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கென தனியான துறைகளை நிறுவுவதன் மூலமோ கணிசமான தொகையை சம்பாதிக்க முடியும் என நிபுணர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் தேவையான சில மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்ய தொழில்முனைவோரை ஊக்குவிப்பது டொலர்களை சேமிப்பதற்கான மற்றொரு சிறந்த வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.