லண்டன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை இளைஞன்

Kanimoli
2 years ago
லண்டன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை இளைஞன்

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் கரையொதுங்கிய நிலையில் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்ட உடல் இலங்கையரது என தெரியவந்துள்ளது.

அகில கால்லகே என்ற சிங்கள இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நதியில் நீச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நடந்த திடீர் விபத்தில் இந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மரணம் தற்கொலையோ அல்லது கொலையோ அல்ல என பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இலங்கை இளைஞனின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் டெஸ்பரோ செயிலிங் கழகம் அருகே ஆண் ஒருவர் தண்ணீருக்கு அடியில் சென்றதாகவும், அவர் மீண்டும் வெளியே தென்படவில்லை எனவும் நேரில் பார்த்தவர்கள் தகவல் வழங்கியிருந்தனர். 

இதனைத் தொடர்ந்து தண்ணீருக்கு அடியில் காணாமல் போன நபரை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வியாழன்கிழமை மாலை சர்ரேயில் உள்ள படகு கிளப்பில் அருகில் உள்ள தேம்ஸ் நதியின் நீர்வழிப்பாதையில் ஆண் ஒருவரின் உடல் கரையொதிங்கியதும் அது குறித்து அவசர சேவை மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் தேம்ஸ் நதி கரையில் இருந்து உடலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.