சல்மான் ருஷ்டியை கத்தியால் தாக்கிய மர்ம நபரின் அடையாளத்தை கண்டெடுத்த போலீசார்கள்

Prasu
2 years ago
சல்மான் ருஷ்டியை கத்தியால் தாக்கிய மர்ம நபரின் அடையாளத்தை கண்டெடுத்த போலீசார்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென எழுந்த மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்று, கத்தியால் அவரது கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தினார். 

இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனே அவர் மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபர் 24 வயதான ஹடி மடர் என்பதும், நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. 

இந்த தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டி செயற்கை சுவாசக் கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு கண் பார்வையை ருஷ்டி இழக்க நேரிட்டுள்ளது என அவரது புத்தகத்தின் ஏஜெண்ட்டு தெரிவித்துள்ளார். 

சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு வெளியிட்ட தி சடனிக் வர்சஸ் (The Satanic Verses) என்ற புத்தகம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.