நாட்டின் மாகாணங்களுக்கான ஆளுநர் நியமனம் பெரும் குழப்பமாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தகவல்

Kanimoli
2 years ago
நாட்டின் மாகாணங்களுக்கான ஆளுநர்  நியமனம் பெரும் குழப்பமாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தகவல்

நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்  நியமனம் பெரும் குழப்பமாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய பலரை ஆளுனர்களாக நியமிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆளுனர் பதவிகளுக்கு தனியான பெயர்களை முன்மொழிந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்த்து சட்ட விரோதமாக செயற்பட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க உட்பட மாகாண உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆகும்.

முன்னாள் அமைச்சர் தயா கமகே, ஜோன் அமரதுங்க நவீன் திசாநாயக்க மற்றும் வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷமேல் செனரத் ஆகியோரும் ஐ.தே.க சார்பில் ஆளுநர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர்களாவர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூன்று ஆளுநர்களுக்கு அந்த ஆளுநர் பதவிகளில் நீடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அதிபர் ரணிலிடம் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுநர் பதவிகளில் நீடிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியவர்கள் லலித் யூ கமகே, வில்லி கமகே மற்றும் எம். ஜே.முசம்மில் ஆகியோராவார்.