இன்றைய வேத வசனம் 20.08.2022: சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 20.08.2022:  சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்

ஊர் சுற்றிப் பார்ப்பது நமது அறிவையும், அனுபவத்தையும் விரிவடைய செய்யும். ஆனால், சில நேரம் அது தேவையில்லாத ஆபத்துக்களையும் கொண்டுவரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கு உரிமை இருக்கிறது என்று வேதாகமம் நமக்கு சொல்கிறது. என்றாலும், பெண்களின் பெலகீனமானது ஆண்களின் பலத்தால் சமநிலைப் படுத்தப்படவேண்டும் என்பது வேதாகமம் நமக்கு கற்றுத்தரும் பாடமாகும்.

பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம் எந்த அளவுக்கு பயன்படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்கு அதற்கான விலையையும் செலுத்த வேண்டும் என்பதை குறிப்பாக பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தீனாளின் மேல் தவறு இல்லை என்றாலும் அவள் மேல் மயங்கிய அரச குமாரன் தன் அதிகாரத்தை பயன்படுத்தவும், அந்த அரச குமாரனின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவனையும் நாட்டு மக்களையும் அழிக்க அவனது அண்ணன்களின் கோபம் மற்றும் பழி செயல்படவும் அவள் மறைமுகமான காரணமாகிவிட்டாள்.

பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லுவது அவர்களை அடிமைகளாக்குவதற்கு அல்ல அவர்களுக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என்பதற்காகவும்தான்.

நாம் தவறு செய்யாவிட்டாலும் பிறரது தவறுகளால் நாமும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதனால் தான் பெண்கள் மிகவும் கவனமாயிருக்க வேண்டும்.

அவர்கள் தேவனுடைய பார்வையில் ஆண்களுக்கு சமம் என்றாலும், அவர்களது பலவீனம் அவர்களைச் சிறிது கவனமாக இருக்க வற்புறுத்துகிறது.

பெண்கள் தங்கள் பலவீனத்தைத் தங்கள் எச்சரிக்கை என்னும் ஞானத்தால், குணத்தால் சரி செய்து பலம் பெறலாம்.

பெண்கள் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ள வீட்டிலுள்ள பெரியவர்களிடம் அதிகமாக கேட்டு கற்றுக்கொள்ளலாம். பெற்றோரின் மேற்பார்வையில் கைபேசி, தொலைக்காட்சி, இணையத்தைப் பயன்படுத்திவிடலாம். தெரிந்து கொள்ளுதல் பாதுக்காப்புடன் இருக்கும்போது அது நலமே..!

நீதிமொழிகள் 31:30

சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.