அனைவரும் ஒன்றிணைந்து புதிய தேசிய ஊட்டச்சத்து கொள்கையை உருவாக்க வேண்டும் - சஜித் பிரேமதாச

#Sajith Premadasa
Prasu
2 years ago
அனைவரும் ஒன்றிணைந்து புதிய தேசிய ஊட்டச்சத்து கொள்கையை உருவாக்க வேண்டும் - சஜித் பிரேமதாச

நாட்டில் போசாக்குக் குறைபாடு நிலவுவதாக யுனிசெப் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், கட்சி பேதமின்றி அமைச்சர் ஆசை வார்த்தைகளுக்கு அகப்படாமல் தாய் சேய் நலத்தில் கவனம் செலுத்தி, இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து புதிய தேசிய ஊட்டச்சத்து கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும் சிகிச்சைத் துறைக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இந்த அனைத்துப் பணிகளுக்கும் 6 முதல் 59 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், பாடசாலைப் பிள்ளைகள் போன்ற முக்கிய குழுக்களை இலக்காகக்கொண்டு கூட்டு போஷாக்கு திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என நேற்று (7) நாட்டின் போசாக்கின்மைநிலைமை தொடர்பிலான விசேட பாராளுமன்ற விவாதத்தின் போது இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தாய் சேய் போசாக்கு மற்றும் போசாக்கு குறைபாடு தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்துமாறு தாம்கோரிய போது, இவ்வாறான விவாதத்தை வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்தெரிவித்தார்.

கொவிட் காரணமாக நாட்டில் பாரதூரமான நிலைமை காணப்பட்ட போதிலும், ஆட்சியாளர்களின் தவறுகளினால் இது மிகவும் சோகமாக மாறியதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதனால் நாட்டின் கல்வித் துறையும் வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையின்படி, நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளதுடன் மனிதாபிமான உதவி தேவைப்படும் 57 இலட்சம் பேரில், 23 இலட்சம் பேர் குழந்தைகள் என்றும், அறுவடை 40-50% அளவில் குறைவடைந்துள்ளது எனவும், அலகின் உணவு அளவு 70% குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் 93.7 வீதமாக உயர் உணவுப் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், உணவில் சரியான போசாக்கு இல்லாத காரணத்தினால், போசாக்கு குறைபாடும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவையனைத்தும் தேசிய உற்பத்தி செயல்முறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமெனவும், மனித முன்னேற்றத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த நிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கூறினார்.

கர்ப்பிணித் தாய்மார்களின் சத்துணவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பணம் ஒதுக்குவதில் சிரமம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் பாரிய அளவிலான அமைச்சரவையை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்த முடிவு தவறானது எனவும், இந்த நேரத்தில் குழந்தைகளையும் கர்ப்பிணித் தாய்மார்களையும் தற்போதுள்ளசூழ்நிலையில் இருந்து காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.