கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்: 41வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்

Mayoorikka
2 years ago
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்: 41வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 41வது நாள் கவனயீர்ப்பு போராட்டம், தலைமன்னார் கிராமம் பகுதியில் இன்று இடம்பெற்றது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் போராட்டம் இடம்பெற்றது.

இதில் கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், மன்னார் மெசிடோ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த செயல் திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டதுடன் வருகை தந்த பொது மக்களுக்கு அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான சாதக பாதக விளைவுகள் தொடர்பாக தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது.

குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.