யார் இந்த பாபா வங்கா? இவருக்கு இந்த சக்தி கிடைத்தது எப்படி?

Kanimoli
2 years ago
 யார் இந்த பாபா வங்கா? இவருக்கு இந்த சக்தி கிடைத்தது எப்படி?

உலகம் விஞ்ஞான அறிவியலை அடிப்படையாக கொண்டு நகரும் வேளையில் மக்கள் உலக சாத்திர சாரியான பாபா வங்காவின் வாக்கிற்கு முக்கியம் கொடுப்பதற்கான காரணம் என்ன? யார் இந்த பாபா வங்கா? இவருக்கு இந்த சக்தி கிடைத்தது எப்படி?

பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார்.

1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் 1996 ஆம் ஆண்டில் தனது 84 வது வயதில் இறந்து போனார். இறந்து போகும் போது அவருக்கு இலட்சக்கணக்கில் சீடர்கள் இருந்தனர்.

குறிப்பாக ரஷ்யா, கிழக்கு ஐரோப்பாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அவர் வாழ்ந்த காலத்தை விட இறந்த பிறகு அவர் பல்வேறு உலக நிகழ்வுகளை சரியாக கணித்து முன்கூட்டியே சொன்னார் என்ற கதைகள் இணையம் முழுவதும் வைரலாக பரவிவருகின்றன.

கொரோனா தொற்று நோய், இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விடயங்கள் இவர் முன்கூட்டியே கணித்து உள்ளதாக அவரது சீடர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயின்றி தந்தை, சித்தியுடன் வறிய குடும்பத்தில் வளர்ந்த இவருக்கு 12-13 வயது இருக்கும் போது பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயலில் கண்களில் மின்னல் தாக்கி பார்வை பறிபோனது.

அதேவேளை, புயலில் சிக்கிய போது அவருக்கு ஒரு அமானுஷ்ய சக்தி வந்ததாகவும் அதன் பிறகு அவர் மக்களைப் பற்றியும், எதிர்கால உலக நடப்புகளைப் பற்றியும் சரியாகக் கணித்துக் கூறினார் என்றும் அவரது சீடர்கள் கூறுகிறார்கள்.

பல்கேரிய மொழியே அவருக்கு முழுமையாகத் தெரியாது. பார்வையற்றவர்கள் படிக்கும் முறையில் கொஞ்சம் செர்பிய மொழியில் படிப்பார் எனவும் தெரியவந்துள்ளது. அவர் எந்த புத்தகத்தையும் எழுதியதில்லை.

அவர் கணித்ததாக கூறப்படும் நிகழ்வுகள் அனைத்தும் அவருடைய உதவியாளர்களால் தொகுக்கப்பட்டவை. பிறகு அவை பல்வேறு நூல்களாக வெளிவந்தன.

அந்தக் கணித்தல்கள் பல அவர் மறைவுக்கு பிறகு வெளியானவையாகும் இவர் இன்னும் 5000 ஆண்டுகளுக்கான உலக நிகழ்வுகளை கணித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் 2022ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். அதன்படி 2022ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து அட்டாக் செய்யும். இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தை கணித்ததாக குறிப்பிடப்படும் பாபா வங்காவின் வாசகங்களுக்கு சிலர் ஆதரவாகவும் சிலர் பொய்யானவை என்றும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.