பழைய விலையில் உள்ள பால்மாவை பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகை

Kanimoli
2 years ago
பழைய விலையில் உள்ள பால்மாவை பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகை

  மட்டக்களப்பு - கோறளைப்பற்று, மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பழைய விலையில் உள்ள பால்மா பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது வர்த்தக நிலையத்தில் , பால்மாக்களும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தை அண்டிய பிறைந்துரைச்சேனை மாவடிச்சேனை பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சில்லறை வியாபார நிலையமொன்றில் 540.00 ரூபா 790.00 ரூபா ஆகிய பழைய விலையில் பதுக்கி வைக்கப்பட்ட 400 கிராம் பால்மா புதிய விலையான 1,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் , பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.