கிளிநொச்சியில் 11 மாதங்களுக்கு பிறகு பிடிபட்ட கொலையாளி

Prathees
2 years ago
கிளிநொச்சியில் 11 மாதங்களுக்கு பிறகு பிடிபட்ட கொலையாளி

கிளிநொச்சி, பரந்தன், சிவபுரம் பகுதியில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நபரொருவரை அரிவாள்களால் வெட்டிக் கொன்ற சந்தேகநபர் 11 மாதங்களுக்குப் பின்னர் நேற்று (18) கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இரவு பரந்தன், சிவபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா காதீஸ்வரன் என்ற 27 வயதுடைய இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என்பதுடன், குடும்பத் தகராறு காரணமாக சந்தேகநபர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் கொலையின் பின்னர் சிறிது காலம் தலைமறைவாகியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (19) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.