அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

Kanimoli
1 year ago
 அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள 315 லின்வுட் தெருவில் (Linwood street) அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6வது தளத்தில் துர்நாற்றம் வீசப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மோப்ப நாய்களுடன் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சூட்கேசில் அழுகிய நிலையில் ஒரு சடலத்தின் துண்டுகள் கிடந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து குடியிருப்புவாசிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 20 வயது இளம்பெண்ணை சில நாட்களாக காணவில்லை என தெரிய வந்துள்ளது.

மேலும், சில நாட்களுக்கு முன்பாக இளம்பெண் அவரது ஆண் நண்பருடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை கேட்ட பொலிஸார் ஆண் நண்பரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.