கஞ்சா ஏற்றுமதி செய்வதற்கான சட்டம் அமைச்சரவையில்!

ஒளடத பயன்பாட்டுக்கான கஞ்சா மூலிகையை ஏற்றுமதி செய்வதற்கான சட்டத்தை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய மருத்துவ, ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னதாக அதற்கான அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ தேவைக்கான கஞ்சா மூலிகையை உற்பத்தி செய்வதன் ஊடாக நாட்டிற்கு அதிகளவான ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்று ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘உள்ளூர் மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தை ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே 3 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாங்கள் பாரிய வளத்தின் மீது வாழ்கிறோம். அந்த வெற்றிகளை இன்னும் எமது நாட்டிற்கு வழங்க முடியாமல் உள்ளது.
இது தொடர்பாக உள்ள தடைகள் குறித்து கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்திலும் வெளியேயும் நீண்ட விவாதம் இடம்பெற்று வருகின்றது. மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பற்றியும், அதன் ஏற்றுமதி சாத்தியம் பற்றியும் மிகவும் வலுவான விவாதம் நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக கஞ்சா மூலிகையின் ஏற்றுமதி பிரதிபலனை எதிர்வரும் காலங்களில் நாட்டுக்கு வழங்க முடியும். சர்வதேச சந்தையில் மருத்துவ கஞ்சாவிற்கு 4 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான கேள்வி உள்ளது.
இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மேற்கத்தைய ஆங்கிலேயப் பேரரசு காலத்தில் இந்த மருத்துவ செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டன.
எனவே அந்த பாரம்பரிய மருத்துவத்துடனேயே மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பற்றிய விவாதம் எழுந்தது’ என்று ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.



