உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை நாடிய பொன்சேகா

Prathees
1 year ago
உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை நாடிய பொன்சேகா

கொழும்பில் பல இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக நியமித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்கிரமரத்ன ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரச இரகசியச் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் அவ்வாறான உத்தரவை பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றனர்.

மேலும், ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தமது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றில் தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியாகாத வகையில் உத்தரவு பிறப்பிக்கவும், மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் வழங்கப்படும் வரை அதனை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.