பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் யுவதி பலி

Kanimoli
1 year ago
பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில்  யுவதி பலி

பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கோவிட்ட பிரதேசத்தில் கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட சென்றிருந்த கொள்ளையர்கள் சிலரை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் குறி தவறியதில் பேருந்தில் பயணித்த யுவதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். கொள்ளையர்கள் சிலர் தங்கோவிட்டவில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் கொள்ளையர்களை முற்றுகையிட்ட போது, கொள்ளையர்கள் தாம் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் கொள்ளையர்களை பின் தொடர்ந்து சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது ஒரு துப்பாக்கி வேட்டு தவறுதலாக அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் பட்டுள்ளது. குறி தவறிய இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி, அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காலி பிரதேசத்தை சேர்ந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரை அவர்கள் வத்தளை பிரதேசத்தில் கைவிட்டு சென்றுள்ளதுடன் அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு கொள்ளையர்கள் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.