இன்றைய வேத வசனம் 03.10.2022: நீ பயப்படாதேஇ நான் உனக்கு துணை நிற்கிறேன்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 03.10.2022: நீ பயப்படாதேஇ நான் உனக்கு துணை நிற்கிறேன்

ஒருமுறை மந்திரவாதிகளாக இருந்து இரட்சிக்கப்பட்ட சிலரை நான் சந்தித்தேன்.
அதில் ஒருவர் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை என்னோடு கூட இப்படியாகப் பகிர்ந்து கொண்டார்: 
இரட்சிக்கப்படுவதற்கு முன்பு வரை அவருடைய பரம்பரைத் தொழிலே பணத்திற்காக மந்திரவாதம் பண்ணுவதுதான்.

அவருடைய ஒரு வாலிப மகள் மிஷனெரிகள் மூலமாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, சாட்சியாக வாழ்ந்தாள்.

அவளுடைய தகப்பன் மந்திரம் செய்வதற்கென்று பிரத்தியேகமாக ஒரு அறை வைத்திருந்தார்.
அதற்குப் பக்கத்தில் இருந்த அறை, அவளுடைய ஜெப அறையாக இருந்தது.

அவள் ஜெபிக்க ஆரம்பித்த நாளிலிருந்து, அவளுடைய தகப்பன் அந்த அறைக்குள் இருந்து கொண்டு எவ்வளவு மந்திரவாதம் செய்து அசுத்த ஆவிகளை வரவழைத்தாலும், அந்த ஆவிகள் உள்ளே வருவதில்லை.

அதற்குக் காரணம் தன்னுடைய மகள் தான் என்று அறிந்து கொண்ட அந்தத் தகப்பன், மிகுந்த கோபத்தோடு அவளை அழைத்து, “இதோ பார், 'இயேசு' என்று சொல்லிக் கொண்டு, ஜெபம் பண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது. உன்னுடைய ஜெபம் என் தொழிலைப் பாதிக்கிறது.” என்று சொல்லி, அவளை எச்சரித்தார்.

அதற்கு அவள், "இல்லை அப்பா. நீங்கள் செய்கிற காரியம் ரொம்பவே தவறு. நீங்கள் அவைகளை ‘கடவுள்' என்று நம்பித்தானே வணங்குகிறீர்கள்!

ஆனால், அவைகளை வைத்தே மந்திரவாதம் பண்ணி, எத்தனை குடும்பங்களை பாழாக்குகிறீர்கள்! 
அது நமக்கு சாபத்தைத்தானே கொண்டு வரும்? இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவர்தான் உண்மையான தெய்வம். எனக்காக மரித்து உயிர்த்தெழுந்த அவரை நான் விட முடியாது.” என்று சொன்னபோது," இனிமேல் இந்த வீட்டில் நீ இருக்கக் கூடாது.” என்று சொல்லி, கோபத்தில் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

அவள் அதே கிராமத்திலிருந்த சொந்தக்காரருடைய வீட்டில் தங்கியிருந்து கொண்டு, வயல் காட்டு வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தாள்.

அங்கும் அவள் ஜெபிப்பதை விடவில்லை. ஆனால் அவளுடைய தகப்பன் மிகுந்த வைராக்கியத்தோடு, "எப்படியாவது அவளை இயேசுவை மறக்கப் பண்ண வைத்து, இயேசு இல்லாமல் அவளை வீட்டிற்கு திரும்பக் கொண்டு வர வேண்டும்.

அவள் வரவில்லை என்றால், செத்தாலும் பரவாயில்லை.” என்று சொல்லி, மிகுந்த கோபத்தோடு ஒருநாள் இரவு தன்னுடைய மகளுக்கு விரோதமாக மந்திரவாதம் செய்ய ஆரம்பித்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்திருந்த எந்த ஆவியும் வரவில்லை. 

திடீரென்று அந்த அறைக்குள் பிரகாசமான ஒரு வெளிச்சம் வானில் இருந்து வந்தது.
அந்த வெளிச்சத்திற்கு மத்தியில் ஒரு இயேசுவின் மென்மையான குரல் கேட்டது.
இதுவரை அந்த மந்திரவாதி அப்படிப்பட்ட ஒரு காட்சியையும், குரலையும் பார்த்ததே கிடையாது. "வந்திருப்பது யார்?” என்று அவருக்குத் தெரியவுமில்லை.“

நீங்கள் யார்? நான் உங்களைக் கூப்பிடவில்லையே! ஏன் இங்கு வந்தீர்கள்?” என்று அந்த மந்திரவாதி கேட்டார்.
உடனே இயேசு, “உன் மகள் ஆராதிக்கிற அந்த இயேசு நான்தான். நீ செய்கிற இந்த மந்திரவாதம் அவளுக்கு விரோதமானதல்ல. அது எனக்கு விரோதமாக செய்யப்படுகிற மந்திரவாதம்.

அவள் என்னுடைய மகள். என் மகளுக்காக நான் வந்திருக்கிறேன். நீ என்னதான் மந்திரவாதம் பண்ணினாலும் அவளை யாரும் தொட முடியாது.

இனி நீ என் மகளுக்கு விரோதமாக மந்திரவாதம் பண்ணினால், என் கரம் உனக்கு விரோதமாக எழும்பும். நான் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை இன்றைக்கு நீ அறிந்து கொள்.” என்று சொல்லி அவரை எச்சரித்தபோது, அந்த மந்திரவாதி நடுங்கித் திகைத்துப் போனார்.

"இப்படியும் ஒரு வல்லமையுள்ள, பரிசுத்தமுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா? இவரைப் பற்றி யாரும் எனக்கு இதுவரை சொல்லவில்லையே!”
என்று மிகவும் ஆச்சரியப்பட்டு, "ஆண்டவரே, என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இந்த மந்திரவாதத்தை நான் செய்ய மாட்டேன். நான் உங்களை விசுவாசிக்கிறேன்.” என்று சொல்லி, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டார்.

எனக்கு அன்பானவர்களே, நீங்கள் வசிக்கிற இடத்தில், அல்லது நீங்கள் வேலை செய்கிற இடத்தில் உங்களுக்கு விரோதமாக தீமை செய்ய எத்தனை பொல்லாத மனிதர்களை சாத்தான் எழுப்பினாலும், கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். 

கர்த்தர் உங்களைப் பார்த்து: "நானே உனக்குத் துணையாக நின்று யுத்தம் பண்ணுவேன். ஆகவே, நீ பயப்படாதே!” என்று சொல்கிறார். 

உங்கள் வாழ்க்கையில் பல விதங்களில் யுத்தங்களை நீங்கள் சந்திக்கிறீர்கள் அல்லவா? அதைக் குறித்து பயந்து கொண்டிருக்காமல், “கர்த்தாவே, நான் உமது பிள்ளை. 'உனக்காக நான் யுத்தம் பண்ணுவேன்.' என்று எனக்கு நீர் வாக்குக் கொடுத்திருக்கிறீர் அல்லவா?

ஆகவே, நீர் எனக்கு துணையாக இருக்கிறபடியினால், நீரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்.” என்று சொல்லி , அவரிடத்தில் விட்டு விடுங்கள். 

அதற்குப் பிறகு, "என்ன நடக்கிறது?" என்று பாருங்கள்! சூழ்நிலைகள் எல்லாம் மாறும்!
எத்தனை கோடிக்கணக்கான மந்திரவாதிகள் ஒன்று சேர்ந்தாலும், இயேசு கிறிஸ்துவை ஜெயிக்க முடியாது.
ஏனென்றால், அவருடைய நாமத்தின் வல்லமைக்கு முன்பாக, அத்தனை மந்திரவாதங்களும், பிசாசும், அத்தனை அசுத்த ஆவிகளும் நடுங்கும்!

ஆகவே, ஒன்றுக்கும் நீங்கள் பயப்படாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்வார்கள்!

தீமை செய்கிற, பொறாமை கொண்ட மனிதர்களை சாத்தான் எழுப்பத்தான் செய்வான்.
ஆனால், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், “நீ பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன்.” என்று கர்த்தர் சொல்கிறார்.

ஆமென்!!