ஜப்பான் வான்பரப்பு மீது பறந்த வடகொரியா ஏவுகணை - மக்களுக்கு எச்சரிக்கை

#NorthKorea #Missile #Japan
Prasu
1 year ago
ஜப்பான் வான்பரப்பு மீது பறந்த வடகொரியா ஏவுகணை - மக்களுக்கு எச்சரிக்கை

வாஷிங்டன் வட கொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியது, இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. இதை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது. 

2017ம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும். அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவப் பயிற்சிக்கு மத்தியில், 10 நாட்களில் தென்கொரியாவின் ஏவுகணை வீசப்பட்டு உள்ளது. 

தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் கூறியதகவல்படி, ஏவுகணை வட கொரியாவின் சீனாவுடனான மத்திய எல்லைக்கு அருகிலுள்ள முப்யோங்- ரியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 7:23 மணியளவில் ஏவப்பட்டது. 

இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் அதிகபட்சமாக 1,000 கிலோமீட்டர் (621 மைல்) உயரத்தில் 20 நிமிடங்களுக்கு சுமார் 4,600 கிலோமீட்டர்கள் (2,858 மைல்கள்) பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்த ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்ததோடு, வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை "மோசமானது" என கூறினார். 

ஏவுகணையை சுட்டு வீழ்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜப்பான் கூறியது. வடகொரியாவில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவுகணை ஏவப்படுவதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்பை பலப்படுத்த விரும்புவதால், எதிர் தாக்குதல் திறன் உள்ளிட்ட எந்த விருப்பங்களையும் நிராகரிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா கூறினார். 

தென் கொரியா தனது இராணுவத்தை மேம்படுத்துவதாகவும் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் கூறி உள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் ஒரு அறிக்கையில் கூறியதாவது;- ஜப்பான் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை செலுத்தும் வடகொரியாவின் "ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற" முடிவை வன்மையாக கண்டிக்கிறோம்.