முல்லைத்தீவு போராட்டத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பை அடுத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Kanimoli
1 year ago
 முல்லைத்தீவு போராட்டத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பை அடுத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

 முல்லைத்தீவில் இடம்பெறும்  போராட்டத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பை அடுத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரியும் சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை (03.10.2022) அன்று காலை முற்றுகையிட்ட முல்லைத்தீவு மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர் .

இவர்களது போராட்டம் இன்று (05)மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற நிலையில் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்லும் மீனவர்களான தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ளதாகவும் இவ்வாறான அதிகாரிகள் எமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

கடந்த 03.10.2022 அன்று காலை கடல் தொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காத போதிலும் பின்னர் அனுமதித்தனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தேசிய கடற்றொழில் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் தமக்கான தீர்வுகள் வரும் வரையில் குறித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என அறிவித்த மீனவர்கள்,  கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தில் மீனவர்கள் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் .
இந்நிலையில் இன்றையதினம் இவர்களது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாது அவர்களும் தொடர்ச்சியான போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். இந்த நிலையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்து ஆத்திரமடைந்த மீனவர்கள் தமது படகுகள் வலைகளுக்கு தீவைத்தனர்.

இதில்  ஒரு மீன்பிடி படகு மற்றும் வலைகள் என்பன தீயில் முற்றாக எரிந்த நிலையில் மேலும் படகுகள் மீது தீ பரவாமல் பொலிஸார் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களை தடுத்தனர்.

இந்நிலையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை வைத்த முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் , சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகைதந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் மற்றும் மாத்தளன் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் முஸ்லிம் மீனவர்கள் என சுமார் முந்நூறு பேரளவில் முல்லைத்தீவு பேருந்து நிலையம் அருகே காலை பதினொரு மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என கோரி ஏற்கனவே மூன்று நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் குறித்த மீனவர்கள் மற்றும் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் இடையே முரண்பாடுகள் ஏற்படலாம் என்ற நிலையில் பொலிசார் போராட்டக்காரர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி செல்லாத வகையில் முல்லைத்தீவு கடற்கரை வீதியில் இலங்கை வங்கிக்கு முன்பாக ஒரு வீதித்தடையும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி வரமுடியாத வகையில் ஒரு வீதித் தடையையும் இன்று காலைமுதல் ஏற்ப்படுத்தியிருந்தனர் .

 வீதித்தடையை உடைத்தெறிந்த போராட்டக்காரர்கள்
இந்நிலையில் இன்று அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என கோரிய சுருக்குவலை தொழிலுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் இலங்கை வங்கி முன்பாக பொலிசார் அமைத்த வீதித்தடையை உடைத்து கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி சென்று ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை தாக்க முற்ப்பட்டபோது இவ்வாறு வன்முறை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட சாலை மற்றும் இரணைப்பாலை புதுமாத்தளன் கொக்கிளாய் மீனவர்கள் மீது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிபடையினர் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டனர் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலக வாயிலில் அமைக்கப்பட்ட கொட்டகையில் போராடி வரும் அதே வேளை அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என்று கேட்டு போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மாவட்ட செயலக முன்றலில் போராடி வருகின்றனர்.