ஜப்பானில் மனைவியின் உடலை 11 ஆண்டுகளாக ஆழ்கடலில் தேடிவரும் நபர்

Prasu
1 year ago
ஜப்பானில் மனைவியின் உடலை 11 ஆண்டுகளாக ஆழ்கடலில் தேடிவரும் நபர்

ஜப்பானில் சுனாமியில் சிக்கி மாயமான தனது மனைவியை 11 ஆண்டுகளாக கணவர் ஒருவர் தொடர்ந்து தேடி வரும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட சக்திவாய்ந்த சுனாமியால் நாட்டிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி Onagawa என கூறப்படுகிறது. இந்த பகுதியில் தான் Yasuo Takamatsu தமது மனைவியை சுனாமிக்கு தொலைத்துள்ளார்.2011 மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட இந்த Tōhoku சுனாமியால் சுமார் அரை மில்லியன் மக்கள் குடியிருப்பை இழந்ததுடன், 20,000 பேர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 2,500 பேர்களின் சடலம் மீட்கப்பட்டாத நிலையில் அவர்கள் மாயமானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், Yasuo Takamatsu தமது மனைவியை கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து தேடி வருகிறார். கரையில் மட்டுமல்ல அவர் கடலிலும் தமது தேடுதலை தீவிரப்படுத்தி வருகிறார். சுமார் இரண்டரை ஆண்டு காலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமது மனைவியை தேடி வந்த Yasuo Takamatsu, 2013ல் ஆழ்கடலில் மூழ்கி தேடுதலை தொடர்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார்.

வங்கி ஊழியரான குறித்த பெண்மணியின் மொபைல்போனானது, அவர் பணியாற்றிய கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து Yasuo Takamatsu மீட்டுள்ளார். சுனாமி ஏற்பட்டு சில மாதங்களுக்கு பின்னர் அவரது மொபைல்போன் மீட்கப்பட்டதை அடுத்து, தமது தேடுதல் நடவடிக்கையை Yasuo Takamatsu தீவிரப்படுத்தியுள்ளார்.தற்போது 65 வயதாகும் Yasuo Takamatsu வாரத்தில் ஒருநாள் ஆழ்கடலில் மூழ்கி தமது மனைவியின் உடலை தேடி வருகிறார். கடலின் போக்கு காரணமாக அவரது உடலை தாம் மீட்காமல் போகலாம், ஆனால் தேடுவதை மட்டும் நிறுத்தப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமியின் போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தமது மாமியாரை கவனித்து வந்துள்ளார் Yasuo Takamatsu. மலை முகட்டில் இருந்த இந்த மருத்துவமனையிலேயே சுனாமி எச்சரிக்கையடுத்து மக்கள் பாதுகாப்பு கருதி திரண்டனர்.ஆனால், Yasuo Takamatsu-வின் மனைவி அப்போது வங்கியில் பணியில் இருந்ததால் அவரால், உரிய நேரத்தில் வெளியேற முடியமல் போயுள்ளது. மேலும், கட்டுப்பாடுகள் அமுலில் இருந்ததால் Yasuo Takamatsu, உடனடியாக Onagawa பகுதிக்கு செல்லவும் முடியாமல் போனது.

இதன் பின்னர் குறித்த வங்கி ஊழியர்கள் அனைவரும், Yasuo Takamatsu மனைவி உட்பட சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

Tōhoku சுனாமிக்கு முன்னர் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது 9.1 ரிக்டர் அளவில் பதிவானது. ஜப்பானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் மட்டுமின்றி, மனிதகுல வரலாற்றில் மிக மோசமான 4வது பேரிடர் இதுவென கூறுகின்றனர்.