31 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொடூர கொலையில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது

Prathees
1 year ago
31 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொடூர கொலையில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது

1991 ஆம் ஆண்டு, மஹரகம, நாவைன்ன மற்றும் பாணந்துறை மாவத்தை, பெலகிரிய ஆகிய இடங்களில் வசித்த தந்தை மற்றும் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதன்படி இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணையில் மேற்கண்ட பிரதான சந்தேகநபர் மேலும் பலருடன் மதுபான விருந்து வைத்துள்ளார்.

விருந்தின் போது, ​​பாணந்துறை, பெசிறி மாவத்தை என்ற முகவரியில் வசித்து வந்த மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பின்னர் சடலம் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பே போல்கொட ஆற்றுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம், இக்கொலையுடன் தொடர்புடைய மது விருந்தில் இருந்த மற்றுமொரு சந்தேக நபர் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொல்லிகொட வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று (08) கஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.