அமெரிக்காவில் நடன அழகிகள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் - சம்பவ இடத்தில் இருவர் மரணம்

#America #Attack #Death
Prasu
1 year ago
அமெரிக்காவில் நடன அழகிகள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் - சம்பவ இடத்தில் இருவர் மரணம்

அமெரிக்க நாட்டில் நெவாடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாஸ் வேகாஸ் என்ற நகரில்  கிளார்க் என்கிற பிரபல பொழுதுபோக்கு இடம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேர கேளிக்கை விடுதிகள், மதுபார்கள் மற்றும் ஓட்டல்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கிளார்க் பகுதியில் கேளிக்கை விடுதிகள், மதுபார்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இந்த கிளார்க் நகர வீதியில் நடன அழகிகள் கவர்ச்சி நடனமாடும் மேடை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கு கையில் கத்தியுடன் வந்த நபர் ஒருவர் நடன அழகிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேட்டார். அவர் கையில் கத்தியுடன் இருந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதற்கு மறுத்துவிட்டார். ஆனால் அதை மீறி நடன அழகிகளை நெருங்கி சென்ற அந்த நபர் திடீரென அவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலா புறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த நபர் தன் கண்ணில்பட்டவர்களையெல்லாம் சரமாரியாக குத்தினார்.

இந்த பயங்கர சம்பவத்தில் நடன அழகிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே இந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலையாளியை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து  அவர்களை கைது செய்தனர்.

இந்த தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதலில் பின்னணி என்ன? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியாத நிலையில் இது குறித்து காவல்துறையினர்  தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு  வருகின்றனர்.