ராஜபக்சக்களைக் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் - அநுரகுமார திஸாநாயக்க

Kanimoli
1 year ago
ராஜபக்சக்களைக் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் - அநுரகுமார திஸாநாயக்க

நாட்டை அழித்த ராஜபக்சக்களைக் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தனது அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்காக இளைஞர்களிடம் அனுதாபம் தேடும் முயற்சியில் நாமல் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. மேலும் தெரிவித்துள்ளதாவது,

"ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஒரே காரணத்துக்காக இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அன்று அந்தக் கைதுக்கு எதிராகக் குரல் கொடுக்க வக்கில்லாத நாமல் ராஜபக்ச, இன்று, சிறையிலுள்ள இளைஞர்களைச் சமூகமயப்படுத்த வேண்டும் என்று கூறுவது வெட்கக்கேடானது.

ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தை பின்னால் இருந்து எவரும் வழிநடத்தவில்லை. இளைஞர்களும் மக்களும் தாமாகவே முன்வந்து போராடினார்கள்.

நாட்டைக் காக்கப் போராடியவர்களைக் கைது செய்யாமல் நாட்டை அழித்த ராஜபக்சக்களைத்தான் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

மக்களின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 'ரணில் - ராஜபக்ச' அரசை வீட்டுக்கு விரட்டியடிக்கும் வரை அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள்" - என்றும் தெரிவித்துள்ளார்.