வெளிவிவகாரக் கொள்கையை திருத்தம் செய்வது மிகவும் அவசியம் - மைத்திரிபால சிறிசேன

Kanimoli
1 year ago
வெளிவிவகாரக் கொள்கையை திருத்தம் செய்வது மிகவும் அவசியம் - மைத்திரிபால சிறிசேன

சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையால் ஒருபோதும் மீண்டெழ முடியாது. ஆகவே வெளிவிவகாரக் கொள்கையை திருத்தம் செய்வது மிகவும் அவசியம் என சிறிலங்கா சுதந்தரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் சர்வதேசம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.

ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக பேசப்பட்டு, இலங்கையை சர்வதேச நாடுகள் புறக்கணிக்கும் நிலை காணப்பட்டது.

2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணையுடன் நான் அதிபராக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும் நன்மதிப்பையும் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.

நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் நன் மதிப்பை பெற்றது. கடந்த இரண்டரை வருட காலத்துக்குள் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையில் பொருளாதாரப் பாதிப்புக்கான காரணத்தையும் சர்வதேசம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பில் ஐ.நாவின் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.