ரணிலின் திட்டங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் இடையூறு!

Mayoorikka
1 year ago
ரணிலின் திட்டங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் இடையூறு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் இடையூறு விளைவிக்கின்றனர். 

அவரின் காலையும் இழுக்கின்றனர்’ என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் மகாநாயக்க தேரர் வலவாஹேனுனவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய தேரர், ஊழல் அரசியல்வாதிகளை புகழ்ந்து பேசாமல் மக்களின் அவலநிலையை தான் எப்பொழுதும் முன்னிலைப்படுத்துவதாகவும், தம்மை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் ஆனால், தாம் மரணத்திற்கு அஞ்சவில்லை எனவும் தெரிவித்தார். 

‘மிகிந்தலை நகரில் மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களை திறக்க பிரதேசத்தில் உள்ள பல அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். ஆனால், நான் அவர்களின் திட்டங்களை முறியடித்துள்ளேன். 

சமூக வலைத்தளங்கள் மூலம் எனக்கு எதிராக அரசியல் கையாட்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அங்கி அணிந்த இவரை அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இருப்பினும், மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லை என குறிப்பிட்டார். 

மிகிந்தலையில் உள்ள 30க்கும் மேற்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானவை என தேரர் மேலும் தெரிவித்தார்.