இன்றைய வேத வசனம் 28.12.2022: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 28.12.2022: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து

ஒரு ஆற்றின் ஓரமாக இரண்டு மரங்கள் இருந்ததாம். ஒரு குருவி அந்த முதல் மரத்திடம் வந்து, மழைக்காலம் வருவதால் நான் தங்க உன் கிளைகளில் ஒரு கூடு கட்டிக் கொள்ளவா? என்று கேட்டதாம்.
அந்த முதல் மரம் மறுமொழியாக, நீ என் கிளைகளில் கூடு கட்ட உனக்கு அனுமதி தரமுடியாது! என்று மறுத்து விட்டதாம்.

உடனே அந்தக் குருவி இரண்டாவது மரத்திடம் சென்று, உன் கிளைகளில் கூடு கட்ட எனக்கு அனுமதி தருவாயா? என்று கேட்டதாம்.

அந்த இரண்டாவது மரம், நீ தாராளமாக என் கிளைகளில் கூடு கட்டிக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்ததாம்.

அந்தக் குருவி மகிழ்ச்சியுடன் அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாம்.

ஒரு நாள் திடிரென்று பெய்த ஒரு பெரும் மழையால், ஆற்றில் வெள்ளம் வந்து அந்த முதல் மரத்தை வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டதாம்.

உடனே அந்தக் குருவி, நீ எனக்கு கூடு கட்ட அனுமதி தரவில்லை என்பதால் தான் உனக்கு இப்படி எல்லாம் நடக்கிறது என்று ஏளனம் செய்ததாம்.

அதற்கு அந்த மரம் சொல்லிய பதில், எனக்கு முன்பை போல பலம் இல்லை. நான் மிகவும் வலுவிழந்து விட்டேன். புயலுக்கோ, வெள்த்திற்கோ நான் தாக்கு பிடிக்க மாட்டேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் உனக்கு நான் கூடு கட்ட அனுமதி அளிக்கவில்லை என்று சொன்னதாம்.
இதை வாசிக்கும் உங்களுக்கும் கூட அனேக கேள்விகள் இருக்கும்!

ஆண்டவர் அவர்களை எல்லாம் அவ்வளவு உயர்வாக வைத்திருக்கிறார். அவர்களுக்கு அவ்வளவு பெரிய ஊழியம் கொடுத்திருக்கிறார். தேவன் அவர்களை அவ்வளவு வாய் பயன்படுத்துகிறார். ஆனால் எனக்கு எந்த ஒரு வாய்ப்பு தரவில்லை என்று நீங்கள் யோசிக்கலாம்.

அதே நேரத்தில் நீங்கள் சற்று அமைதியாக உட்கார்ந்து, அந்த வாய்ப்புகளை இந்த நேரத்தில் உங்களுக்கு கொடுத்தால், அதை கண்ணியமாக என்னால் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? 

இன்னும் அந்தரங்கத்தில் வெற்றி பெற வேண்டிய காரியங்களை எல்லாம் வெற்றி பெற்று விட்டேனா? என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்த்தால், தேவன் நமக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்பது நமக்கு விளங்கும்.

நம்முடைய பலவீனங்களை உணர்ந்து நாம் ஸ்திரபட்டதிற்கு பின் தான் நம்முடைய சகோதரர்களை ஸ்திரப்படுத்த முடியும்!

ஆண்டவர் நமக்கு இன்னும் வாய்ப்பு தரவில்லை என்றால், அவர் நம்புகிற இடத்திற்கு நாம் இன்னும் வரவில்லை என்று தான் அர்த்தம்.

நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து. (#லூக்கா 22:32)
ஆமென்!! அல்லேலூயா!!!