பொருளாதார நெருக்கடியை சமாளித்து உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் சிக்கன முறைமை

#Lifestyle #economy #Dollar
பொருளாதார நெருக்கடியை சமாளித்து உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் சிக்கன முறைமை

உலகின் பொருளாதார நெருக்கடியால் உலகெங்கும் வாழ் மக்கள் நிதிப்பிரச்சினையில் தினமும் ஊசலாடுகிறார்கள். இதற்கு ஒரே வழி தற்போது சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதாகும்.

சிக்கனத்தை கடைப்பிடிக்கத் தவறினால், பணப்பிரச்சினைகள் உருவாகி, மனப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் கேட்டதை எல்லாம் உடனே வாங்கி கொடுப்பது தவறு. சிக்கனமாக இருப்பதை குழந்தைகள் உணரும்படி பக்குவமாக எடுத்துச் சொல்வது பெற்றோரின் கடமையாகும்.

சிக்கனம் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானது. நாம் சிக்கனமாக வாழ்ந்தால் நமது சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள். இதில் பெண்களின் பங்கு முக்கியமானது. குடும்பச் செலவுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த உடைகள் மற்றும் நகைகள் அணிந்து இருந்தால்தான் சமுதாயத்தில் மதிப்பு என்று கருதி, சில பெண்கள் அவற்றுக்காக அதிகமாக செலவு செய்வார்கள்.

அழகு பராமரிப்புக்காக அதிகமாக செலவு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். அவற்றை தவிர்த்து இயல்பான அழகுக்கு தேவையான பராமரிப்புகளை மட்டும் செய்துகொள்ளலாம். கணவனும்-மனைவியும் பணிக்குச் செல்லும் பல குடும்பங்களில், சமையலில் சிக்கனம் தவறிப்போகும். நேரம் இல்லாத காரணத்தால், மாதத்தில் பல நாட்கள் வெளியில் வாங்கி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள்.

விலை உயர்ந்த காய்கறிகள், சமையல் பொருட்கள் தான் உடலுக்கு நல்லது என நினைத்து, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவார்கள். அவற்றை விட நமக்கு அருகில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் பல மடங்கு சத்து கொண்டதோடு, விலையும் குறைவாக இருக்கும்.

வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அவர்களுக்கு தகுந்தபடி சிக்கனமாக உணவு தயாரிப்பது அவசியம். அளவுக்கு அதிகமாக சமைத்து உணவை குப்பையில் கொட்டுவது தவறாகும்.  தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

புதிது புதிதாக விற்பனைக்கு வரும் விலை உயர்ந்த செல்போன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது சிக்கனத்தின் அடிப்படையாகும். சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சிக்கனம் சீரான வாழ்க்கைக்கு உதவும். கஞ்சத்தனம் யாரும் மதிக்காத நிலையை உண்டாக்கும். இதை உணர்ந்து தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்தால் சிறப்பாக வாழலாம்.