கைவிடப்படுகின்ற கைக்குழந்தைகளும், தத்தெடுக்கும் வழிமுறைகளும்!

#SriLanka #baby #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
கைவிடப்படுகின்ற கைக்குழந்தைகளும்,  தத்தெடுக்கும் வழிமுறைகளும்!

நாட்டின் 75வது சுதந்திர தினமான 04.02.2023 அன்று திருகோணமலை சர்தாபுர கிராமத்தின் காட்டுப் பகுதி ஒன்றில் பிறந்து சில மணிநேரங்களேயான கைக்குழந்தை ஒன்று கைவிடப்பட்டிருந்த நிலையில் சிலர் அக்குழந்தையை பாதுகாத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

பின்னர் அக்குழந்தை வைத்தியசாலையின் பராமரிப்பில் எடுக்கப்பட்டு நீதிமன்றம் ஊடாக சிறுவர் நன்நடத்தை திணைக்களத்திடம் கையளிக்கப்படும்.

இதுபோன்றதொரு சம்பவம் கடந்த வருடம் கிண்ணியாவில் இடம்பெற்றிருந்தது. கிண்ணியா வைத்தியசாலையில் இக்குழந்தை கைவிடப்பட்டிருந்த நிலையில் அது பொலிசார் ஊடாக வைத்தியசாலையின் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பொலிசாரினால் தகவல்கள் திரட்டப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக சிறுவர் நன்நடத்தை திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. பின்னர் அக் கைக்குழந்தை பொருத்தமான தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்டு தற்போது நலமாக இருக்கின்றது.

நாட்டில் உள்ள 9 மாகாணங்களிலும் சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தின் கீழ் இவ்வாறான குழந்தைகளையும், 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களை பராமரிக்கும் தனியான பிரிவு இயங்கி வருகின்றது. கிழக்குமாகாணத்துக்குரிய பிரிவு திருகோணமலை – துளசிபுரத்தில் இயங்கி வருகின்றது.

கைவிடப்படுகின்ற கைக்குழந்தைகள்


வளர்ப்பதற்கு வசதி இல்லாத தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சிறுவர் நன்நடத்தை திணைக்களத்திடம் சட்டரீதியாக ஒப்படைக்க முடியும். எனினும் தவறான வழியில் குழந்தைகளை பெறும் நபர்களே பச்சிலம் குழந்தைகளை தெருவோரம் வீசுவதும், கொலை செய்யும் செயற்பாட்டிலும் ஈடுபடுகின்றார்கள். இவர்களும் இத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக கையளிக்க முடியும் உங்களுடைய இரகசியங்கள் பாதுகாக்கப்படும்.


குறித்த திணைக்களம், இவ்வாறானவர்கள் இலகுவாகவும், இரகசியமாகவும் தொடர்பு கொள்வதற்குமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளை எவ்வாறு தத்தெடுப்பது?


குறித்த இந்த குழந்தையை தத்தெடுப்பதற்கு பலர் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் குறித்த திணைக்களத்திடமிருந்து இலகுவாக தத்தெடுத்துவிட முடியாது விண்ணப்பித்து 2 வருடங்களுக்குமேல் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

கைவிடப்பட்ட குழந்தை ஒன்று 3 மாதங்களுக்குப் பின்னரே தத்தெடுப்பதற்கான தகுதிக்கு வரும் அதுவரையான காலப்பகுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள், உறவினர்கள் தொடர்பான தகவல்கள் ஆராயப்படும்.

குழந்தைகளை தத்தெடுக்க விரும்புகின்றவர்கள் உங்களுடைய விண்ணப்பங்களை சிறுவர் நன்நடத்தை திணைக்களத்திடம் வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பித்த ஒழுங்கின் அடிப்படையில் இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற குழந்தைகள் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட ரீதியாக வழங்கப்படும். அதற்காக குறித்த தம்பதியினரின் சொத்து விபரங்கள் மற்றும் வருமான மூலங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பிள்ளையினுடைய பெயரில் சொத்துக்களை எழுதி வைக்கவேண்டும் மேலும் தத்தெடுக்கின்ற குழந்தைகளை நாமாக தேர்வு செய்து தத்தெடுக்க முடியாது.

கோரிக்கை


ஓவ்வொரு தம்பதியினரின் வாழ்நாள் சாதனை என்பது பிள்ளைச் செல்வம்தான். இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. குழந்தையை தத்தெடுப்பதற்கான பட்டியலில் ஆயிரக்கணக்கானவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக மிகப்பெரிய செல்வந்தர்களும் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே கிடைப்பதற்கு அரிய பிள்ளைச் செல்வத்தை தவறான வழியில் பெற்றாலும் அவர்களை பாதுகாப்பாக தேவையானவர்களுக்கு சேர்ப்பிக்க உதவுங்கள்.

குழந்தைகளை கொலை செய்வதையும், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளையும் தாய்மார்கள் முற்றாக தவிர்த்துக் கொங்ளுங்கள். அவர்களும் "இந்த உலகில் வாழப் பிறந்தவர்கள்"

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4