பாலியல் புகார் பாதிரியார் நாகர்கோவிலில் கைது

#Sexual Abuse #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
பாலியல் புகார் பாதிரியார் நாகர்கோவிலில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(30). இவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை என்னும் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார். இந்நிலையில் பாதிரியார் பெனடிக்ட் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வந்தன. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட் களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

அதே சமயம் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர், பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும். உடலில் மோசமாக தொட்டதாகவும். பின்னர் வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பியதாகவும், அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், பேச்சிப்பாறையில் இருந்து பிலாங்காலை சர்ச்சுக்கு மாற்றல் ஆகி சென்ற பிறகும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் அந்த பெண் புகாரில் கூறி உள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார், பாலியல் உணர்வை தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைத்தளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் பாதிரியார் பயன்படுத்திய செல்போண் நம்பர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போன் எண்களையும் தனிப்படை போலீசார் கண்காணித்து வந்த நிலையில், நாகர்கோவில் வழியாக பாதிரியார் செல்வது தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் பாதிரியாரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். தொடர்ந்து பாதிரியார் விசரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.