கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி தரமான கல்வி விருத்திக்கு வழிவகுக்கிறதா? சஜித் கேள்வி

#SriLanka #Sri Lanka President #Sajith Premadasa #Ministry of Education #education #Student #School Student
Mayoorikka
3 years ago
கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி தரமான கல்வி விருத்திக்கு வழிவகுக்கிறதா? சஜித் கேள்வி

நமது நாட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி  நல்ல கல்வி விருத்திக்கு வழிவகுக்கிறதா என்பதை நாம் கண்டறிய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

ஹம்பந்தோட்டை வீரவில எம். ஆர்.தாஸிம் முஸ்லிம் வித்தியாலயத்துக்கு பிரபஞ்சம் திட்டத்தின் 25 ஆவது கட்டத்தின் கீழ் டிஜிடல் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (29) இடம்பெற்ற போதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

எமது நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களை வெளிநாட்டு உள்ளூராட்சி மன்றங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு சிஸ்டர் சிட்டி நட்பு எண்ணக்கருவின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படும் என்று தான் கூறும் போது, இது குறித்த சரியான புரிதல் இல்லாத இந்நாட்டிலுள்ள ஒரு சில அறிவீனர்கள் கேலி செய்வதாக குறிப்பிட்டார்.

எவர் எவ்வாறான கேலி செய்தாலும், இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைக்கப்பட்டு நாட்டிலுள்ள பாடசாலைகள் மற்றும் நகரங்களை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

சுனாமிப் பேரலையால் நம் நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான பாடசாலைகள் அழிவுக்குட்பட்ட போது, வெளிநாடுகளிலுள்ள பாடசாலைகளில் இருந்து பிள்ளைகள் பணம் சேகரித்து நமது நாட்டில் பாடசாலை கட்டமைப்பை மீளக்கட்டியெழுப்ப உதவினார்கள் என்றுதான் அவ்வாறு கேலி செய்பவர்களிடம் கூற வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

புதிய எண்ணக்கருக்களை, புதிய போக்குகளை, புதிய திட்டங்களை வகுத்து அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்த பிரபஞ்சம் எண்ணக்கரு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த எண்ணக்கரு குறித்து யார் எவ்வாறு பேசினாலும் அல்லது கேலி செய்தாலும், இந்த எண்ணக்கரு இப்போது மூச்சு மற்றும் பிரபஞ்சம் திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளதாக நினைவூட்டினார்.
 
நமது நாட்டிலுள்ள சில பாடசாலைகளில் ஒரு ஆங்கில ஆசிரியர் கூட இல்லாத நிலை காணப்படுவதாகவும், இது குறித்து எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி எப்படியாவது அந்த ஆசிரியர்களை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

எழுத்தறிவில் உயர் மட்டத்தில் இருக்கிறோம் என்று கூறப்பட்டாலும், அந்த கணிப்பீட்டை நம்பமுடியாது எனவும் தெரிவித்த அவர், இந்நாட்டில் சம்பிரதாய முறையிலான கல்வி முறைமையில் மாற்றம் வர வேண்டும் எனவும், இதனூடாக உயர் எழுத்தறிவை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4