சீன தேசத்தில் தமிழும் வளஞ்சியரும்

#China #Article #Tamilnews #Lanka4
Kanimoli
1 year ago
சீன தேசத்தில் தமிழும் வளஞ்சியரும்

ஒரே ஒரு குடிமொழி என்பது விவசாயம் சார்ந்து, ஒரே இடத்தில நிலையாக வாழும் குடிகளுக்கு பெரும்பாலும் பொருந்தும். காரணம் அனைவருக்கும் மற்ற மொழிகளை கற்க வேண்டும் என்ற எந்த பொருளாதார வாழ்வியல் தேவையும் இல்லை.

ஆனால், வணிகம் சார்ந்து வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லும் வணிக அலை குடிகளுக்கு இது பொருந்தாது. வணிகம் காரணமாக பல்வேறு மொழிகளைக் கற்றுப் பேசும் வணிகக்குடியினருக்கு அவர்கள் நிலைக்கொள்ளும் பட்டனம், தாவளங்கள் பகுதியில் வழங்கும் மொழியே புழங்கும் மொழியாகிறது. அவர்கள் குறைந்தது இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளை எழுதவும் படிக்கவும் பேசவும் தெரிந்தவர்களாக உள்ளனர்.

தென்னக வணிகக்குடியினரை பொறுத்தவரை தென்னகம் முழுவதுமே அதன் தாயகம், தென்னக மொழிகள் அனைத்துமே அதன் உட் பிரிவினரின் தாய் மொழியெனக் கொள்ளவேண்டும்.

இருப்பினும் வளஞ்சியர்கள் எங்கெல்லாம இருமொழிக் கல்வெட்டுகள் வெட்டுகிறார்களோ அங்கு தமிழ் பகுதி கல்வெட்டும் இருக்கும். உதாரணமாக சாதவாகனரின் பிராகிருத மொழி காசில் தமிழும் பிராகிரதமும், ஐஹோலே கன்னட கல்வெட்டுகளில் கன்னடமும் தமிழும், ஆந்திர பகுதி வணிகக் கல்வெட்டுகளில் தெலுங்கும் தமிழும், சீன தேசத்து கல்வெட்டில் சீன மொழியும் உண்டு தமிழ் மொழியும் உண்டு.

சீனாவை கைப்பற்றி ஆண்ட மங்கோலிய அரசனின் நலம் வேண்டி, சீனாவில் Kaiyuan வைணவ கோவிலில் ஐநூற்றவ வளஞ்சியர் கட்டுகின்றனர். அங்கு வெட்டிவைத்த கல்வெட்டில் தமிழ் சீனம் என்ற இருமொழிகளும் உண்டு. இந்த மங்கோலிய மன்னன் அப்பகுதியை கைப்பற்றுவதில் வெளிநாட்டு வணிகர்களின் பங்கு அதிகம் என ஆய்வேடு ஒன்று கூறுகிறது. இதில் வளஞ்சிய வணிகர்/படையின் பங்கும் இருக்கலாம் என்பது அந்த ஆய்வாளரின் கருத்து. ஏனெனில் பெரும் நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய கெங்கிஸ்கான் மரபு வணிகத்தை ஊக்குவித்தது. எனவே, வணிகப்படைகளும் தங்களுக்கு ஆதரவும் தரும் அரசுகளுக்கு படையுதவி அளித்தது. இந்த வளஞ்சியர் வணிகக் குடி, சோழர்களின் பிரதிநியாக சீனாவில் இருந்தனர் என சீன ஆவணங்கள் கூறுகின்றன.

இந்த கோவிலில் பல இந்திய சிற்ப அமைதியில் திராவிட பாணியில் சிற்பங்கள் உள்ள இக்கோயில் பல மாறுதல்களுக்கு உள்ளாக்கப்ட்டுள்ளது. இக்கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட பார்வதி சிலை ஒரு கிராமத்தில் இன்றும் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. ஒருவேளை அவர்கள் அவ்வணிகக்குடியின் தோன்றல்களாக இருக்கலாம்.

உலகின் மூலை முடுக்கிற்கு தமிழைத் தாங்கி சென்றவர்கள் தென்னக வணிகக்குடியினர்.