சித்திரை விஷு பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

#God #Kerala #Temple
Mani
1 year ago
சித்திரை விஷு பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தையும் முன்னிட்டு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி சித்திரை விஷு பண்டிகையையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை துவக்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.

அப்போது, ​​18ம் படியின் கீழ் கற்பூர ஆழி ஏற்றப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து அனுமதிக்கப்படுவர்.

நாளை (புதன்கிழமை) முதல் தினசரி அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை ஆகியவற்றை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அதைத்தொடர்ந்து படி பூஜை ஆகியவை நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும

வரும் 15ம் தேதி சித்திரை  விஷு பண்டிகையன்று வழக்கம் போல் காலை நடை திறக்கப்பட்டு ஐயப்ப சுவாமி தரிசனத்திற்காக விஷுகனி வைக்கப்படும். அதன்பிறகு, காலை 7.30 மணி வரை விஷுகனி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். விஷூ பண்டிகையையொட்டி தந்திரி மற்றும் மேலசாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை வழங்குவார்கள்.

சித்திரை மாத பூஜைக்காக வரும் 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும். வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, சஹஸ்ர கலச பூஜை போன்ற பூஜைகளும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

சிறப்பு பூஜைகளின் ஒன்பது நாள் நடைபெறும் சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கிடைக்கிறது. மேலும் ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை எளிதாக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படுகின்றன.