அதிகரிக்கும் இஸ்ரேல் மோதல் - முகாமிலிருந்து 3000 பேர் வெளியேற்றம்

#Attack #Israel #Refugee
Prasu
3 years ago
அதிகரிக்கும் இஸ்ரேல் மோதல் - முகாமிலிருந்து 3000 பேர் வெளியேற்றம்

பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போரின் முக்கிய நிகழ்வாக, நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில், இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. 

இந்த தாக்குதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், ஜெனின் நகர அகதிகள் முகாமில் இருந்து வெளியேறியதாக பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் 18,000 பாலஸ்தீனியர்கள் வசிக்கும் அந்த முகாமில் இருந்து இதுவரை 3000 பேர் வெளியேறியிருக்கின்றனர் என்றும் அவர்களை ஜெனின் நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற தங்குமிடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறியிருக்கிறார், 

ஜெனின் துணை ஆளுநர் கமல் அபு அல்-ரூப். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களிலேயே இல்லாத அளவிற்கு மிகத் தீவிரமான இராணுவ நடவடிக்கை என்று கூறும் விதமாக ஒரு தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியிருக்கிறது.

நேற்று தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கணக்கான துருப்புக்களையும் பாலஸ்தீன போராளிகளை தாக்க அனுப்பியிருக்கிறது. இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர் என்றும், காயமடைந்தவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் செய்தித்தொடர்பாளர் ஜூலியட் டூமா, முகாமில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தினார்.

 பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனமான யு.என்.ஆர்.டபிள்யு.ஏ. (UNRWA), பல முகாம்களில் வசிப்பவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றுக்கான பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4