ராகுல்காந்தியின் மனுவை நிராகரித்த குஜராத் உயர் நீதிமன்றம்

#India #Court Order #Rahul_Gandhi #Gujarat
Prasu
1 year ago
ராகுல்காந்தியின் மனுவை நிராகரித்த குஜராத் உயர் நீதிமன்றம்

"மோடி" என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியமை தொடர்பில் ராகுல்காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை மீள்பரிசீலனை செய்யக்கூறி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

அதன்படி, குறித்த குற்றச்சாட்டில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஇ மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் ராகுல் காந்தி தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்.

அதை தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து சூரத் செசன்ஸ் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் மனுமீதான விசாரணையையடுத்து ராகுல் காந்திக்கு பிணை வழங்கப்பட்டதுடன் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றை நாடினார். கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்ற நீதவான் ஹேமந்த் பிரச்சாக்,கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதன்படி இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 மேலும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது. ராகுல்காந்தி மீது குறைந்தது பத்து குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குஜராத் உயர்நீதிமன்றம் தமது அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது