சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது

#India #Moon #Tamilnews #ImportantNews #Rocket #Space
Mani
1 year ago
சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது

'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் தேவையான அனைத்து கூறுகளும் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து சோதனைகளும், சோதனை ஓட்டங்களும் முடிந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணி தற்போது இறுதி கட்டத்தில் எட்டி உள்ளது.

'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது. நிலவில் லேண்டர் பகுதி மெதுவாக தரையிறங்கும் இடம். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த மூன்று பகுதிகளுக்கு இடையேயான ரேடியோ அலைவரிசையும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் -3, விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியாவை மேலும் முன்னேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் லட்சிய நிலவுப் பயணம் இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது. இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், இந்தியாவில் சந்திரயான்-3 முயற்சியின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது