கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

#India #Tamil Nadu #Tamilnews #Breakingnews
Mani
1 year ago
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவாக மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.206 கோடி செலவில் 8 தளங்களைக் கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது.

உலகில் உள்ள பெரிய நூலகங்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று ஜூலை 15ஆம் தேதி திறந்து வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதாலும், மாண்புமிகு தலைவர் காமராஜரின் பிறந்தநாளைக் குறிப்பதாலும் இந்தத் தேதி முக்கியத்துவம் பெறுகிறது.

திட்டமிட்டபடி மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதற்காக இன்று பகல் 11.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் அவர் ஓய்வெடுக்கிறார்.

பின்னர் மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். நூலக வருகையைத் தொடர்ந்து, காவலர் ரிசர்வ் லைன் மைதானத்தில் கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளன.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல். நிறுவன தலைவர் ரோஷிணி நாடார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மேலும், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 3,500 கல்லூரி மாணவர்களும், 6,500 பள்ளி மாணவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.