ஜாதகத்தில் குரு மோசமான நிலையில் இருப்பவர்களுக்கான பரிகாரம்

#spiritual #ஜோதிடம்
ஜாதகத்தில் குரு மோசமான நிலையில் இருப்பவர்களுக்கான பரிகாரம்

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் குரு சிறப்பாக அல்லது மோசமாக இருக்கும். இதில் சிறப்பாக இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுகின்றனர். ஆனால் ஜாதகத்தில் குரு மோசமாக அமைந்தவர்கள் அதனால் ஏற்படும் கெடுதல்களில் இருந்து தப்பிக்க பொதுவான பரிகாரம் ஏதாவது உள்ளதா என்பதை இன்றைய  பதிவில் பார்க்கலாம்:

 குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்கள் பிறக்கும் போது நல்ல திசை இருந்தால் குரு சாதகமான பலன்களையே தருவார்.

 அதனால் எந்தப் பெயர்ச்சியாக இருந்தாலும், அவரவர் தசா புக்தியை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். தசா புக்தி நன்றாக இருந்தால் தற்கால கிரக அமைப்புகளால் மொத்தமாக கெடுபலன்கள் ஏற்படாது. 

 பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம்.

 அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.

 எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். 

ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும். அகதிகளுக்கு உதவலாம். வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பது மட்டுமின்றி அந்த நூல்களைப் புதுப்பிக்கவும், மதநல்லிணக்கம் தொடர்பான நூல்கள் வெளிவர உதவுவதும் நல்ல பரிகாரமாகும்.

மேற்குறிப்பிட்டவற்றை மனநிறைவுடன் மெய்யாக செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள் ஓரளவு குறைந்த பாதிப்போடு தப்பலாம். மற்றையவர்கள் சில சலுகைகளை அவரிடமிருந்து பெறலாம்.