கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடற்கரை, நீர்வீழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

#India #Rain #HeavyRain #Tamilnews #Kerala
Mani
1 year ago
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடற்கரை, நீர்வீழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.

தற்போது ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த கனமழை வரும் 27ம் தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அந்த மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உள்ள மீனவர்கள், கேரள கடல் சீற்றம் காரணமாக வரும் 28-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார். இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரைகள், அருவிகள், ஆற்றங்கரைகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மேலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பகுதிகள் மற்றும் காட்டு பகுதி சாலைகளில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி குவாரி தொடர்பான நடவடிக்கைகள், சுரங்கம் மற்றும் கிணறு கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.