இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

#India #Temple #Festival #Kerala
Mani
1 year ago
இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது.

இதனையடுத்து இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை (10ம் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இன்று இந்த பூஜைக்காக அச்சன் கோவிலில் இருந்து நெற்கதிர் கட்டுகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். பட்டு வஸ்திரம் சுற்றப்பட்ட 51 நெற்கதிர் கட்டுகள், அலங்கரிக்கப்பட்ட திரு ஆபரணப்பெட்டி ஆகியவற்றை வாகனத்தில் ஏற்றி தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இந்த நெற்கதிர்களுக்கான பூஜை இன்று மாலை 3 மணிக்கு பம்பை கணபதி கோவிலில் நடைபெறுகிறது. பின்பு விரதமிருந்து வரும் 51 பக்தர்கள் மூலமாக 51 நெற்கதிர் கட்டுகளும் சன்னிதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்படுகின்றன. அவற்றை பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேவசம்போர்டு அதிகாரிகள் பெற்றுக்கொள்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து நாளை காலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்படுகின்றன.

நிறை புத்தரிசி பூஜைக்கு முன் நாள் முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் வழங்கப்படும். இறுதியாக இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.