குருவாயூர் கோவிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்

#India #Temple #Tamilnews #ChiefMinister #Kerala
Mani
1 year ago
குருவாயூர் கோவிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது குருவாயூர் அப்பனுக்கு 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கிரீடத்தையும் துர்கா ஸ்டாலின் காணிக்கையாக அளித்தார்.

தமிழ் நாடு முதல்வர் முக ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலினின் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர். கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு பலமுறை சென்று வந்துள்ளார். ஏற்கனவே துலாபாரம் அளித்துள்ளார் துர்கா ஸ்டாலின். இந்நிலையில் நேற்று குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின், 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 பவுன் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

மேலும் சந்தனம் அரைக்கும் எந்திரத்தையும் குருவாயூர் அப்பன் கோவிலுக்கு வழங்கியுள்ளார் துர்கா ஸ்டாலின். குருவாயூர் கோவிலில் சந்தனம் அரைக்கப்பட்ட பிறகு மிச்சமிருக்கும் தேயா பகுதி அதிகளவு குவிந்து கிடக்கிறது. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

சந்தன கட்டையின் அந்த தேயா பகுதியை விற்கவோ ஏலம் விடவோ அம்மாநில வனத்துறையை தவிர வேறு, தேவசம் போர்டு உட்பட வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த தேயா பகுதியை மற்ற கோவில்களுக்கும் கொடுக்க முடியாது. தேவசம் போர்டுக்கு ஒரு கிலோ சந்தன கட்டை 17000 ரூபாய் என வழங்கும் வனத்துறை, தேயா பகுதியை கிலோ 1000 ரூபாய் என்றே பெற்று வருகிறது.

இதனால் தேவசம் போர்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் துர்கா ஸ்டாலின் வழங்கியுள்ள சந்தனம் அரைக்கும் எந்திரத்தால் பல ஆண்டுகளாக குவிந்துள்ள சந்தனக்கட்டையின் தேயா பகுதிகள் அரைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என்றும், இதனால் தேவசம் போர்டுக்கு ஏற்படும் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் தங்க கிரீடம் வழங்கியுள்ள துர்கா ஸ்டாலின் ஏற்கனவே அதனை செய்வதற்கு கோவிலில் இருந்து சரியான அளவை தேவசம் போர்டு நிர்வாகிகள் மூலம் பெற்றுள்ளார். இந்த கிரீடத்தை கோவையை சேர்ந்த தொழில் அதிபர் சிவஞானம் செய்து கொடுத்துள்ளார். நேற்று காலை 11.35 மணிக்கு நடைபெற்ற உச்ச கால பூஜையின் போது துர்கா ஸ்டாலின் தங்க கிரீடத்தையும் கூடுதலாக சந்தனம் அரைக்கும் எந்திரத்தையும் வாங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.