தொடர்ந்து மூன்றாவது நாளாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் திறப்பு

#India #Tamil Nadu #water #Breakingnews
Mani
1 year ago
தொடர்ந்து மூன்றாவது நாளாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடகாவில் இந்த ஆண்டு போதிய தென்மேற்கு பருவமழை பெய்யாததால் காவிரி படுகையில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. காவிரி படுகையில் உள்ள கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், குறைவான தண்ணீரே வெளியேற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, குறுவை சாகுபடிக்காக கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தியது.

மேலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக விவசாயிகள், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்), கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3-வது நாளாக நேற்றும் காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவில் கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் நேற்று 108.86 அடி (மொத்த கொள்ளளவு 124.80 அடி) நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,219 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 15,611 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,278.70 அடி தண்ணீர் இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 1,935 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7,325 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 22,936 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.