இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதியத்தின் குழு!

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு இன்று (14.09) இலங்கை வருகின்றது.
விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் அதுகுறித்த முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளுக்காக குறித்த குழு இலங்கை வரவுள்ளது.
இவ்வாறு இலங்கை வரும் குழுவானது வரும் 27 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும் என்பதுடன், கடன் சீர்திருத்தம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஆராயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்குக் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்தது.
இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றியிருக்கின்றதா என்பது தொடர்பில் இம்முறை மதீப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



