சீமான் மீதான புகாரை திரும்ப பெற்ற நடிகை விஜயலட்சுமி

#India #Actress #Sexual Abuse #Case #Politician #Seeman
Prasu
1 year ago
சீமான் மீதான புகாரை திரும்ப பெற்ற நடிகை விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், தன்னை திருமணம் செய்து சீமான் ஏமாற்றிவிட்டதாகவும், 6 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்த நிலையில் புகார் மனுவை திரும்ப பெறுவதாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், ”இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூர் செல்கிறேன். யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. 

சீமானிடம் பேசினேன் வழக்கை வாபஸ் பெற்று விட்டேன். நியாயம் கிடைக்கும் என வந்த என்னை பயன்படுத்திக் கொண்டதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானேன், வீரலட்சுமி என்னை தவறாக வழிநடத்துகிறார் என்பதை அறிந்து கொண்டேன் இந்த வழக்கு எனக்கு திருப்திகரமாக இல்லை. 

புகார் அளித்த என்னை மட்டுமே அசிங்கப்படுத்தி வந்தனர். சீமான் மீது காவல்துறையிடம் அளித்த புகார் குறித்து விசாரணை தொய்வாகவே இருந்தது. 

சீமான் பேசும் வார்த்தைகள் கூட தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன்.” என கூறினார்.