மயிலத்தமடு விவகாரம்: போராட்டம் தீவிரமடையும்! சாணக்கியன் எச்சரிக்கை

#SriLanka #Sri Lanka President #Batticaloa #Protest #sanakkiyan
Mayoorikka
2 years ago
மயிலத்தமடு விவகாரம்: போராட்டம் தீவிரமடையும்! சாணக்கியன் எச்சரிக்கை

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததைப்போன்று எதிர்வரும் ஓரிரு வாரங்களில் உரியவாறான தீர்வு வழங்கப்படாவிடின், தமது போராட்ட வடிவத்தை மாற்றி மேலும் வீரியத்துடன் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் நிலங்கள் பெரும்பான்மையின சிங்களவர்களின் குடியேற்றங்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறும் வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

 இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இவ்விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

images/content-image/2023/10/1697498638.jpg

 ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கைத் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய கட்டமைப்புக்களின் அதிகாரிகள், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

 இச்சந்திப்பின்போது மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக உரிய தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார். 

 இருப்பினும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களின் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்திக்கூறிய தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அச்சந்திப்பில் பங்கேற்றிருந்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் இவ்விவகாரம் தொடர்பில் செயற்திட்ட விளக்கமொன்றை (Presentation) முன்வைத்ததாகவும், அது அப்பகுதியில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்போரை நியாயப்படுத்தும் விதத்திலேயே அமைந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

images/content-image/2023/10/1697498219.jpg

 அதேபோன்று ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தாலும்கூட, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் என்போர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுன சார்ந்தோராக இருப்பதனால், ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்படும் பாதுகாப்புசார் உத்தரவுகள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 அதுமாத்திரமன்றி மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் எத்தனை பேர் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்ற ஜனாதிபதியின் கேள்விக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் 'சுமார் 40 குடும்பங்கள்' என்று பதிலளித்ததாகவும், அதனையடுத்து 'அங்கு சுமார் 300 பேர் வரை குடியேற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றதே? அவ்வாறெனில் ஒரு குடும்பத்தில் 10 - 15 பேர் இருக்கின்றார்களா?' என ஜனாதிபதி மீண்டும் கேள்வி எழுப்பியதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

 எனவே இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் அச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அதிகாரிகளில் பலர் பொய்யான விடயங்களையே கூறியதாக சுட்டிக்காட்டிய சாணக்கியன், இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி கூறினாலும், தீர்வு கிடைக்கும் வரை தாம் அதனை நம்பப்போவதில்லை என்றார். 

 மேலும் எதிர்வரும் வாரம் வரை பொறுத்திருக்கப்போவதாகவும், அதற்குள் பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிடின் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி, மேலும் வீரியத்துடன் முன்னெடுப்பதற்குத் உத்தேசித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4