இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்கள் பலிகடா ஆகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ரணில்!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரதேசத்தில் நேற்று (22.10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா பொதுச்செயலாளரின் திட்டத்திற்கு இலங்கை பூரண ஆதரவளிக்கும்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் சிக்கியுள்ளனர், அவர்களின் துன்பங்களை நாம் புறக்கணிக்க முடியாது. இம்மக்களுக்கு தேவையான உணவுகளை இஸ்ரேல் மட்டுமின்றி எகிப்தில் இருந்தும் சுத்தமான தண்ணீருடன் சேர்த்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடரும் அதே வேளையில், இந்தப் போராட்டத்தில் சாதாரண பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகின்றன, மற்ற நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் செயற்பாடுகளுக்கு எமது பூரண ஆதரவை வழங்குவதற்கு நாமும் கடமைப்பட்டுள்ளோம். பாலஸ்தீன அரசாங்கத்திற்கான உண்மையான தேவை உள்ளது”எனத் தெரிவித்துள்ளார்.



