'தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி'!

#India #Tamil Nadu #Festival #Tamil People #people #2023 #Breakingnews #ImportantNews
Mani
10 months ago
'தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி'!

தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என மாநில சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு பலகாரங்கள், புதுபடங்களின் ரிலீஸ் என எல்லாம் இருந்தாலும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நம் அனைவரது நினைவுக்கும் வருவது பட்டாசுகள் தான். தீபாவளிக்கு முதல் நாள் இரவில் இருந்தே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு ஏற்றார் ஆண்டுதோறும் விதவிதமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துகொண்டிருக்கின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாள் முழுவதும் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு பெரும் அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கு என சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுபாடு விதித்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு நேரக்கட்டுப்பாட்டை அறிவிக்குமா? அல்லது தளர்வுகள் ஏதாவது இருக்குமா? என மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீபாவளி அன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.