இலங்கை கிரிக்கட் விவகாரம்: இராஜதந்திர பிரச்சினையாக மாறியுள்ளது! ஹரீன் பெர்னாண்டோ

#SriLanka #Srilanka Cricket #Cricket
Mayoorikka
2 years ago
இலங்கை கிரிக்கட் விவகாரம்: இராஜதந்திர பிரச்சினையாக மாறியுள்ளது!  ஹரீன் பெர்னாண்டோ

இலங்கை கிரிக்கட் இன்று அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரச்சினைக்கு அப்பால் இராஜதந்திர பிரச்சினையாக மாறியுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 இலங்கை கிரிக்கெட்டுக்கு ஐ.சி.சி வித்த தடையினால் கிரிக்கெட் மைதானத்தில் புற்களை வெட்டும், நீர் தெளிக்கும் ஊழியர்களுக்குகூட இன்று சம்பளத்தை வழங்க முடியாமலுள்ளது. கடந்த காலத்திலும் இடைக்கால நிர்வாகக் குழுவை நியமிக்க, நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது முயற்சித்தேன்.

 ஆனால், அப்படி செய்தால் தடை விதிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினால் ஐ.சி.சி.யுடன் சுமார் 8 தடவைகள் நாம் அன்று பேச்சு நடத்தினோம். நாம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுடன் முரண்படவில்லை. இலங்கை கிரிக்கெட் சபையின் கலாசாரம் மாற்றப்படத்தான் வேண்டும். எனினும், நீதிமன்றத்தின் ஊடாகவே இந்த மாற்றங்களை செய்ய வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் ஜெய் ஷாவுடன் தொலைபேசியில் பேசினார்.

 ஏனெனில், இது இன்று இராஜதந்திர பிரச்சினையாக மாறியுள்ளது. ஜெய் ஷாவின் தந்தை தான் அமித்ஷா. அமித் ஷா தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கையாக இருப்பவர். 

அதனால், அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரச்சினைக்கு அப்பால் இது தற்போது சென்று விட்டது.

 எனவே ஐ.சி.சி. இலங்கை கிரிக்கெட் அணிக்கு தடை விதித்தமை தொடர்பாக பாராளுமன்றம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

கிரிக்கெட் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமானால் நாம் அதனை செய்வோம்.அதற்கு முதல் இந்தத் தடையை இல்லாது செய்து கொள்வோம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4