இலங்கையில் அதிகரிக்கும் உணவு நெருக்கடியும் போஷாக்கின்மையும்! கை கொடுக்குமா தற்சார்பு பொருளாளதாரம்

#SriLanka #Food #poor man #Tamil Food #vitamin
Mayoorikka
4 months ago
இலங்கையில் அதிகரிக்கும் உணவு நெருக்கடியும் போஷாக்கின்மையும்! கை கொடுக்குமா தற்சார்பு பொருளாளதாரம்

இலங்கை தற்பொழுது முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு எழுவதற்கு பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

இந்த நிலையில் தான் நாட்டில் உணவு இல்லாமல் அரைவாசிப்பேருக்கும் அதிகமானோர் அதாவது 55 சதவீதமானோர் மூன்று வேளை உணவுக்கே வழியில்லாமல் உள்ளனர்.

 சமகால அரசாங்கத்தின் திட்டமிடல் அற்ற செயற்பாடுகள் நாட்டின் அபிவிருத்தியை அதளப்பாதாளத்திற்கு கொண்டு செல்கின்றன. இதில் பாதிக்கப்படுவது என்னவோ நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் தான். 

இந்த நிலையில் நாட்டில் போஷாக்கு கேள்விக்குள்ளாகிய நிலையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 

மனிதனின் இருப்பு நிலைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அடித்தளமே போஷாக்கான உணவுதான். அதற்கே நாட்டில் உள்ள அநேகமானோர் ஒருவேளை உணவினைப் பெற்றுக்கொள்வதற்கே ஜீவ மரண போராட்டத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 நாட்டின் பொருளாதார நெருக்கடி வறுமையையும் அதனோடிணைந்த உணவுப்பற்றாகுறையையும் தீவிரப்படுத்தியுள்ளது. வறுமை நிலையின் காரணமாக சிறு பிள்ளைகள் மற்றும் கர்பிணித் தாய்மார்கள் மந்த போஷனைக்கு ஆளாகிவருவதோடு இது ஒரு ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கும் பாதகமாக அமைகின்றது.

images/content-image/2023/1701792570.jpg

 இது தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதாவது இன்றைய நிலவரப்படி இலங்கையில் 55% மக்களுக்கு மூன்று வேளை உணவு இல்லை என்றும் இருபத்தி ஒன்பது வருடங்களாக சுபிட்சம் வழங்கப்பட்டாலும், எழுச்சி இல்லை என்றும், தற்போதைய வேலையில்லாத் திட்டமும் இதற்கு காரணம். 

இத்தீர்மானத்தை நிறைவேற்றும் போது கிராம அதிகாரிகளிடம் கூட கருத்து கேட்கப்படவில்லை எனவும் அதனால் லட்சக்கணக்கான முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 மேல்முறையீடு செய்த அனைவரும் மிகவும் ஏழைகள், அப்பாவி மக்கள் என்றும் லட்சக்கணக்கான மக்கள் இன்று பட்டினியால் வாடுகின்றனர் என்றும் அவர் கூறினார். 

இவ்வாறுதான் இன்றைய அரசாங்கத்தின் நிலை உள்ளது. போஷாக்கான உணவு என்பது எல்லோருக்கும் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. 

பின்தங்கிய வறிய மக்கள் ஒருவேளை உணவு கனவாகவே உள்ளது. இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை கடுகளவாகவே உள்ளது. யானைப்பசிக்கு சோளப் பொரி போல அமைகின்றது. 

 இதனிடையே யுனிசெப் மற்றும் அமெரிக்கா போன்றன நாட்டில் உள்ள குழந்தைகளின் நலன் கருதி பாடசாலை மட்டங்களிலும் பின் தங்கிய கிராம மட்டங்களிலும் உணவு வழங்கினாலும் அது பற்றாகுறையாகவே உள்ளது.

images/content-image/2023/1701792601.jpg

 நாட்டின் பொருளாதார நெருக்கடி வேலையில்லாப் பிரச்சனை போன்ற நிலைமைகள் உணவுத் தேவையை ஆதிக்கப்படுத்தி உள்ளன.

 நாட்டின் பொருளாதார நிலைமையுடன் ரஷ்ய உக்ரைன் போர் உள்ளிட்டன உணவு விநியோக தடைகளை ஏற்படுத்தியிருந்தன. அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடு நாட்டின் உணவு பஞ்சத்திற்கு தூபமிட்டன. 

 மலையக மக்கள் உழைப்பிற்கேற்ப ஊதியமின்றி அல்லல்படுகின்றனர். வடக்கு கிழக்கு மக்கள் விவசாய நடவடிக்கைகள் மற்றும் மீன்பிடித்தலுக்கு எரிபொருள் விலையேற்றத்தின் தாக்கத்தினால் அவதியுறுகின்றனர்.

images/content-image/2023/1701792637.jpg

 இதுஇவ்வாறு இருக்க எவ்வாறு நாட்டில் உணவு உற்பத்தியினை மேற்கொள்ள முடியும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

 நாளுக்கு நாள் உணவுகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுகின்றன. இதன்காரணமாக நாட்டில் மந்த போசனை அதிகரித்து வருகின்றது. இது தொடர்பில் உலக நாடுகள் கவனம் செலுத்தயுள்ளன. 

இதன் பாதகமான விளைவுகள் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கபப்டுகின்றது. இதற்கு தேசிய போஷாக்கு கொள்கை ஒன்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். 

இதற்கு நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கடசிகளும் ஒன்றிணைந்து செயற்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் செயற்திட்டங்கள் நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். 

அப்படியாயின் அந்த செயற்திட்டம் வெற்றி அளிக்கும். இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மற்றும் ஏனைய உதவிகளில் இருந்து உணவு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு அதிகளவான நிதி ஒதுக்கி எதிர்கால சமூகத்தினை போஷாக்குள்ள சமூகமாக மாற்றி அமைக்க வேண்டும்.

 அத்தோடு அரசாங்கம் மக்களிடையே தன்னிறைவுப் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் தமக்கு தேவையான உணவினை தாமே உற்பத்தி செய்து கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். 

ஒவ்வொரு கிராம மட்டங்களிலும் இருந்தும் அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். உலக நாடுகளே எதிர்வரும் காலங்களில் பெரும் உணவு நெருக்கடியை முகம் கொடுக்க வேண்டி வரும் என ஆய்வுகள் கூறுகின்றன.

 இந்த நிலையில் சில நாடுகளில் தன்னிறைவுப் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான இயற்கை முறையிலான உணவினை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தியும் வருகின்றன.

 அதேபோல் இலங்கையிலும் தன்னிறைவுப் பொருளாதாரத்தினை ஊக்குவித்து அதற்கான ஊக்கத் தொகை மற்றும் இதர உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும். இல்லையேல் நாட்டில் வாக்களிப்பதற்கு மக்கள் இருக்க மாட்டார்கள். 

தமது அரசியல் இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவேனும் மக்கள் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

 எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தமக்கான ஆரோக்கியமான உணவினை உற்பத்தி செய்ய தவறும் பட்ஷத்தில் நாட்டில் உணவு நெருக்கடி நூற்றாண்டு கடந்தும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது திண்ணமே.

-ஜேசி-